
பாரத பிரதமர் நாளை மறுநாள் தமிழகம் வரும் நிலையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜகவில் எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு பாலசந்தர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ அருந்த சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்து ஓடிவந்த பி.எஸ்.ஓ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது கொடுக்கப்பட்டுள்ள பாலியல் புகார் விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருந்தவர் பாலசந்தர், அதேபோல இஸ்லாமிய அமைப்பு மூலமாகவும், லோக்கல் ரவுடிகள் மூலமாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பிரதமர் தமிழகம் வரவிருக்கும்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)