
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக இந்திய மொழிக்களுக்கான வளர்ச்சி நிதியில் சமஸ்கிருத மொழிக்கு இதுவரை ரூ.2,533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதேசமயம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 5 மொழிகளின் வளர்ச்சிக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஆண்டுக்குச் சமஸ்கிருத மொழிக்கு ரூ.230 கோடியும், மற்ற மொழிகளுக்கு ரூ.13 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து ரூ.147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி” என்று குறிப்பிட்டுள்ளார்.