Skip to main content

பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் அலட்சியம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

 Biryani shop owner  case; Inspector of Police suspended

 

நெய்வேலியில் கடந்த ஆகஸ்ட் மாதம், பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் கடைக்கு வந்த இரண்டு பேர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரைத் தாக்கிவிட்டு சென்றனர். இதுகுறித்து தெர்மல் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். ஆனால் இந்தப் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், மறுநாள் அந்த இரண்டு பேரும் மீண்டும் அந்தக் கடைக்கு வந்து கண்ணனிடம் 'காவல்துறையில் என் மீதே புகார் அளித்தாயா' எனக் கூறி கத்தியால் வெட்டத் தொடங்கினர்.

 

இதில் கண்ணன் காயம் அடைந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவியது. அதன் பிறகு வேறு வழியின்றி தெர்மல் போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். விக்கி மற்றும் எழில் நிலவன் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாத இறுதியில் கண்ணன் பிரியாணி கடையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கண்ணனை ஏற்கனவே தாக்கி சிறையில் இருக்கும் விக்கி என்பவர் கூலிப்படை மூலமாக இந்தக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. சிறையில் இருந்தே நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் காவல்துறையில் புகார் அளித்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விரிவான விசாரணைக்கு விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கண்ணன் புகார் அளிக்கப்பட்ட உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கும் என்றும், மேலும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஓசிஐயு எனப்படும் திட்டமிட்ட நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு போலீசார், கண்ணனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்த எச்சரிக்கை மீதும் தெர்மல் காவல் நிலைய போலீசார் அலட்சியம் காட்டியதால் தான் இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்தது.

 

இதனையடுத்து தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டார். மேலும் இந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.