Bird flu alert for 5 districts!

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

Advertisment

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்குஅருகில் உள்ள 5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17 ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது. அதனால், அண்டை மாவட்டங்களானதிருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.