
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 10/05/2021 அன்று காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு இணையதளம் வாயிலாக செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை கணக்கீடு செய்து புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் மின் வாரிய அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ள மின்வாரியம், வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்புவோர் மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். மே மாதத்திற்கான கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டு இருந்தால் அதை மின்வாரிய அதிகாரிகள் நீக்க வேண்டும். பொதுமக்களுக்கு மின் கணக்கீடு செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவசியம் இருந்தால் மீண்டும் கணக்கீடு மின்வாரிய அதிகாரிகளால் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.