Published on 09/04/2022 | Edited on 09/04/2022

கரூரில் பஜாஜ் ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
கரூர்-கோவை சாலையில் திருக்காம்புலியூர் என்ற இடத்தில் பஜாஜ் ஷோரூம் ஒன்று இயங்கிவருகிறது. நேற்று வழக்கம்போல் பணி முடிந்த பிறகு ஊழியர்கள் ஷோரூமை மூடிவிட்டு சென்ற நிலையில் இன்று காலை பழைய வாகனங்கள் பழுதுநீக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ ஷோரூம் முழுக்க பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் பழையது, புதியது என பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்துக்கு மின்கசிவே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.