bike petrol tank incident youth

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயனில் உள்ள மலை கிராமம் நடுதொரகடிப்பட்டு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சத்யராஜ், இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது கூலி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில், சத்யராஜ், பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, அவை தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் மேல் உள்ள கவரில் வைத்துக் கொண்டு தனது கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது ஊத்துக்காடு பகுதியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக சத்யராஜ் சென்றுக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து சிதறியது. அந்த தீ சத்யராஜ் மீது பற்றிக் கொண்டது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரது இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட, அவரது உறவினர்கள் விரைந்து சென்று சத்யராஜை மீட்டு, கரியாலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisment

பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்யராஜ், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.