2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய குடியுரிமை சீர்திருத்த சட்டம் இந்தியாவிற்கு அவசியமான ஒன்று என்றும், நாட்டின் பாதுகாப்புக்கும் நாட்டு மக்களின் நன்மைக்கு இந்த சட்டம் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய விளம்பரத்துக்காக போராடி வருவதாகவும், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் இந்த சட்டத்தை மக்களின் நலன் கருதி உருவாக்கியிருப்பதாகவும், எந்த ஒரு சட்டமும் ஆரம்பத்தில் அமல்படுத்தும் போது அது தீங்கு செய்வது போல்தான் தெரியும் என்றும் ஆனால் காலம் போகப் போகத்தான் அந்த சட்டம் மக்களுக்கான சட்டம் என்றும் அந்தச் சட்டத்தின் நன்மை புரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு நடிகை மீரா மிதுன் கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.