Skip to main content

"அதெல்லாம் சும்மா உக்காந்துருக்கவங்க பேசுற பேச்சு..." - சேரன் அதிரடி

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் -3' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல சர்ச்சைகளை கடந்து 90 நாட்களுக்கும் மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த இயக்குனர் சேரன் வெளியே வந்து  தனது சீடர் பாண்டிராஜ் இயக்கிய 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் பார்த்துள்ளார். சென்னை கமலா திரையரங்க நிர்வாகம் அவரை வரவேற்று கேக் வெட்டச் செய்து மகிழ்வித்தது. இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சேரன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்...
 

big boss cheran speech

 

"நான் படம் பார்க்கதான் இங்கே வந்தேன். இந்த ஏற்பாடு நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு இந்த ஏற்பாடு செய்த கமலா திரையரங்கு உரிமையாளருக்கு நன்றி. நான் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றதை 90 நாட்கள் பார்த்து அங்கு இருந்து வந்ததை அவர்கள் கொண்டாடினர். எனக்கு இது பெரிய சந்தோசத்தை கொடுத்தது. தர்ஷன் பிக் பாஸ்சில் இருந்து வெளியேறியது வருத்தம். அவர் அந்தப் போட்டியில் வெற்றி பெற தகுதியான மனிதர். ஆனாலும் மக்கள் நினைக்கிறதுதான் நடக்கும். மக்கள் அவருக்கு வோட் பண்ணலையென்றால் ஏதோ ஒரு குறை இருந்திருக்கலாம். எனக்கு பிக்பாஸ் அனுபவங்கள் ரொம்பவே சுவாரஸ்யமா இருந்தது. நான் எனக்குப் பிடித்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போனேன். கலைஞர்கள் பொதுவாகவே ஒரு அனுபவத்துக்காக அவ்வப்போது தங்களை ரெகுலர் வாழ்க்கையிலிருந்து வெளியே எடுத்துக்கொண்டு பயணம் செல்வார்கள். சிலரெல்லாம் இமய மலைக்கு செல்வது போல நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போனேன். அங்கு செல்போன் இல்லாமல், பணம் இல்லாமல், அவர்கள் கொடுத்த பொருள்களை வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வாழ்ந்ததை நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல் உணர்ந்தேன்.

சில நண்பர்கள் எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த மரியாதை பற்றி 90 நாட்கள் காண்பிச்சாச்சு. மரியாதை கிடைத்ததையும் காமிச்சிட்டாங்க, கிடைக்காததையும் காமிச்சிட்டாங்க. மற்ற இயக்குனர்கள் என் மேல் உள்ள அன்பின் காரணமா அந்த பேட்டிகள் கொடுத்திருப்பாங்க. எனக்கு நேர்ந்தது அவமரியாதை கிடையாது. அது அந்த சூழலில் அவர்கள் என்னை புரிஞ்சிகிட்ட விதம். போகப் போக என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். பிக்பாஸ் கண்டிப்பா ஸ்கிரிப்டட் கிடையாது. எங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் மட்டும் ஒரு பேப்பரில் எழுதித் தருவோம். எங்களை கட்டுப்படுத்த ஒரே ஒரு குரல்தான் இருக்கும், அது பிக்பாஸின் குரல். அதுவும் எங்களுக்கு சில டாஸ்க்கள் பற்றி சொல்லத்தான் வரும். கண்டிப்பாக பிக் பாஸ் ஸ்கிரிப்டட் கிடையாது". 


தொடர்ந்து 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியே வந்தவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்களே?' என்று ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "அதெல்லாம் சும்மா உக்காந்துருக்கவங்க பொழுது போகாம பேசுற பேச்சு. அதுக்கெல்லாம் காது கொடுக்கக்கூடாது. நாம ஓட வேண்டியிருக்கு. என் குடும்பத்தை காப்பாத்த நான் ஓடணும், உங்க குடும்பத்தை காப்பாத்த நீங்க ஓடணும். அதுனால இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் காது கொடுக்காம ஓடுவோம்" என்று அதிரடியாகக் கூறி முடித்துக்கொண்டார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு” - சேரன் பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
cheran about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்திருந்தார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியிருந்தது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருந்தது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. அடுத்து யூட்யூபில் முதல் எபிசோடை மட்டும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து உலகளவில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் பின்பு 125 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது. இப்போது 150 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, எக்ஸ் பதிவில், “மிக நேர்த்தியான படைப்பு. மனிதனுக்கான பல்வேறு முகங்களை பதிவு செய்திருக்கிறது. தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு. குறிப்பாக அதில் பெண்களின் உணர்வுகளை அவர்கள் சகிக்கமுடியாத வலிகளை கடந்தும் வாழ்க்கையை எதிர்கொண்டு நிற்கிற தன்மையை இயக்குநர், சம்பவத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை பதிவு செய்தது என்னை ஈர்த்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புரட்சியாளர்கள் எப்படி அடக்குமுறைகளால் வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை அழகாக பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். இந்த வெப் டாக்யூ உருவாகக் காரணம் நக்கீரன் ஆசிரியர், தைரியமாக காட்டுக்குள் சென்று பதிவு செய்த வீடியோ. இந்தத் தொடர் உருவாக, ஒரு உண்மைக் காலம் தாண்டி இச்சமூகத்திற்கு செல்ல உதவியிருக்கிறது. அவருக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.