கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை

 Bhavanisagar dam looks like the sea

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.90 அடியாக உள்ளது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 1, 259 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் தடப்பள்ளி - அரக்கன் கோட்டை, காலிங்கராயன் பாசனங்களுக்கு தொடர்ந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41.75 அடியில் நீடிக்கிறது. அதேபோல் வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.54 அடியை நெருங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tamilnadu water
இதையும் படியுங்கள்
Subscribe