publive-image

Advertisment

பாரதியார் நினைவு நாள் இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11- ஆம் தேதி இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும். திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்கள் 'திரையில் பாரதி' என்ற தலைப்பில் இசை கச்சேரி நடத்தப்படும். செப்டம்பர் 11- ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது தரப்படும். மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும். நினைவு நூற்றாண்டையொட்டி ஓராண்டுக்கு சென்னையில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

Advertisment

பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்களில் எழுதியும், வரைந்தும் பாரதியாரின் வரிகள் பரப்பப்படும். உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி தரப்படும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்தப்படும். ஊரக வளர்ச்சித்துறை மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதார பூங்காவிற்கு மகாகவி பாரதியார் பெயர். எழுத்தும் தெய்வம்- எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.