பாரதிதாசன் பல்கலைகழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு , 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த பல்கலைகழகத்தில் திருச்சியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது.
அதில் 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக் கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது.
இந்த பல்கலைகழகத்தின் சார்பில் நடைபெற்ற சென்ற பருவ தேர்வு விடைத் தாளினை பேராசிரியர்கள் மே மாதம் திருத்தினார்கள். பொதுவாக விடைத்தாள் திருத்தினால் ஏழு நாட்களில் அதற்கான தொகை வழங்கப்பட்டுவிடும். ஒரு விடைத்தாள் திருத்த ரூபாய் 12 வழங்குகின்றது.
கிட்டதட்ட ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்தது 300 பேப்பர்கள் திருத்துவது வழக்கம். தேர்வு முடிவுகள் வெளியாகி புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரி ஆரம்பித்து 1 மாதத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் தற்போது வரை திருத்தப்பட்ட விடைத்தாளுக்கான தொகையினை பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழகம் வழங்கவில்லை.
பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேராசிரியர்களுக்கு உரிய தொகையை விரைவில் வழங்க வேண்டுமென பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.