கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் 65 வயது கோபாலகிருஷ்ணன் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றவரை தண்ணீரில் கிடந்த முதலை ஒன்று காலை கவ்வி நீண்ட தூரம் இழுத்துச் சென்று கடித்துக் குதறியது. இதில் கோபாலகிருஷ்ணன் இறந்து போனார்.
காவல்துறை, தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இறங்கி தேடிச் சென்று முதலையிடமிருந்து கோபாலகிருஷ்ணனை சடலமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம், சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனக்காப்பாளர்கள் அனுசுயா, சரளா, அமுத பிரியன், ஸ்டாலின், புஷ்பராஜ், ஆகியோர் உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உடனடி நிவாரண தொகையாக 50 ஆயிரம் ரூபாய் நிதியை அவரது குடும்பத்தாரிடம் வழங்கியுள்ளனர்.