செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கிப்புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பங்காரு அடிகளார் இயற்கை எய்தினார் என்ற செய்தியால் தமிழக மக்கள் அனைவரும் தங்களின் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை அவருக்கு தெரிவித்திருக்கிறோம். ஆன்மீக பணியில் கல்வியையும் இணைத்து அரிய தொண்டினை ஆண், பெண் என இருதரப்பையும் சமமாக நினைத்து ஆதிபராசக்தியுடைய கருவறைக்குள் சென்று வழிபடுவதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த சக்தி அம்மா பங்காரு அடிகளாரின் மறைவு பேரிழப்பு. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொண்டுள்ளத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், பங்காரு அடிகளாரின் குடும்பத்தாருக்கும் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.