Skip to main content

கலைஞரின் அருமை இனிமேல் தெரியும்! -தவிப்பில் தமிழகத்துப் பெண்கள்!

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
ka

 

கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கிறது பெரும் கூட்டம்.  தொலைக்காட்சியில் இந்தக் காட்சியைப் பார்த்து நம்மால் போக முடியவில்லையே என்னும் தவிப்பு பலருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் கலைஞர் மீது அபிமானம் கொண்ட அத்தனை பேரும் சென்னை சென்று நேரில் அஞ்சலி செலுத்துவதென்பது நடக்கக்கூடிய காரியம் அல்ல.  ஆனாலும், இருக்கும் இடத்திலிருந்தே கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

 

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி வெளிவந்தவுடன், நேற்று இரவிலிருந்தே தமிழகத்தில் எங்கும் பேருந்துகள் ஓடவில்லை. அதனால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.  அனைத்து ஊர்களிலும் கடைகளை அடைத்துவிட்டார்கள். காவல்துறையும் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.  

 

விருதுநகர் மாவட்டத்திலும் பல இடங்களிலும் திமுகவினரும் பொதுமக்களும் கலைஞருக்கு இரங்கல் பேனர் வைத்திருந்தனர். திராவிட இயக்கங்களின் தொட்டில்கள் என்று சலூன் கடைகளைச் சொல்வார்கள். கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு, கதவில் இரங்கல் பேனரை வைத்திருந்தனர். துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்றில்,  பிளாஸ்டிக் சேர் ஒன்றில் கலைஞர் போட்டோவை வைத்து,  தேங்காய் உடைத்து, பழங்களில் அகர்பத்தி ஏற்றி, தெய்வ வழிபாடு போல நடத்தியிருந்தனர். சிவாஜி மன்றங்களும் சிவாஜியின் பாசத்துக்குரிய நண்பர் என்ற வகையில், கலைஞருக்கு தங்கள் பாணியில் இரங்கலைத் தெரிவித்திருந்தனர். 


ஐந்து தடவை தமிழக  முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, எம்.ஜி.ஆர். அளவுக்கு பெண்களின் ஆதரவு இறுதிவரையிலும் கிடைக்கவில்லை. அதனாலேயே, திமுக வாக்கு வங்கி என்பது  அதிமுகவைக் காட்டிலும் குறைவானதாக இருக்கிறது என்பது பொதுவான அரசியல் கணக்கு.  கலைஞர் இயற்கை எய்திவிட்ட நிலையில்,  ‘கலைஞரை ஏன் பிடிக்கவில்லை?’ என்று கேட்டோம் பெண்கள் சிலரிடம். 

 

mani

 

“இப்ப கொஞ்ச நாளா டிவில அவரைப் பத்தி நிறைய சொல்லுறாங்க. இவ்வளவு பண்ணிருக்காரா? இதெல்லாம் அப்பவே  தெரியாம போச்சேன்னு நாங்களே வருத்தத்துல இருக்கோம். அவரை நாங்க என்னமோ வெறுத்த மாதிரி பேசாதீங்க.” என்று கோபித்துக்கொண்டார் மணிமாலை.   

 

in

 

“எம்.ஜி.ஆர். பிடிக்கும்னா நம்பியாரைப் பிடிக்காது. சினிமா பார்த்துப் பார்த்து எங்க மனசு இப்படித்தான் ஆயிப்போச்சு. எம்.ஜி.ஆருக்கு கெடுதல் பண்ணுனாரு கருணாநிதின்னு எல்லாரும் சொல்லிச்சொல்லி, அதையே ஜெயலலிதாவும் பேசிப்பேசி, நாங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டே ஓட்டு போட்டோம். அதே நேரத்துல, அதிமுக ஆட்சி சரியில்லைன்னு தெரிஞ்சப்ப, வீட்ல உள்ளவங்க எடுத்துச்சொல்லி,  திமுகவுக்கும் ஓட்டு போட்டிருக்கோம். என்னமோ போங்க.. அவரு இறந்ததும் எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு. பெண்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்த ஒரு பெரிய மனுஷனை,   அவரு உசிரோட இருந்தப்பவே  நல்லவிதமா மதிக்கலையேன்னு மனசு கிடந்து அரிக்குது.” என்றார் இன்னாசியம்மாள். 

 

me

 

ஸ்டெல்லா மேரி என்பவர் “திருமண உதவித் திட்டம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை,  கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, பெண்கள் சுய உதவிக்குழு இப்படி எத்தனையோ பண்ணிருக்காருங்க. வீட்டுக்கு வீடு கலர் டிவி அவரு கொடுத்ததுதான். பொத்தாம் பொதுவா எல்லா பெண்களும் அவரை வெறுத்தாங்கன்னு சொல்ல முடியாது. அப்படியிருந்தா, திமுக இன்னைக்கு வரைக்கும்  இந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்க முடியாது. எம்.ஜி.ஆரை பிடிக்கும்தான். பெண்ணென்பதால், ஜெயலலிதாவையும் பிடிக்கும்தான். என்னைப் பொறுத்தவரைக்கும்,  கலைஞரைப் பிடிக்கவே  பிடிக்காதுன்னு இனியும் எந்த ஒரு பெண்ணும் சொன்னா, நன்றி விசுவாசம் இல்லாதவங்கன்னுதான் நான் சொல்லுவேன்.” என்றார் உடைந்த குரலில்.   

கலைஞரின் அருமை இனிமேல்தான் தெரியும்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.