Skip to main content

அழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

tasmac

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது திருவதிகை. இங்குள்ள எஸ்.கே.வி. நகரில் வசித்து வந்தவர் 31 வயது சிவக்குமார். இவர் கோயில்களில் சிலைகள் செய்யும் சிற்பக் கலைஞர். இவரின் மனைவி 24 வயது சரண்யா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 வயதில் விக்னேஷ், மூன்று வயது தினேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே சிவகுமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அருமையான தொழில், நல்ல வருமானம், அதை எப்போதும் மது போதையிலேயே செலவழித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. குடியை விட்டுவிடுமாறு அவரது மனைவி சரண்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை, சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் சிவக்குமார் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து குடிப்பதற்காக மது பாட்டிலை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த வமனைவி சரண்யா கணவரைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்துடன் சிவகுமார் வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்திருந்தார். கணவர் சம்பாதிக்கும் பணத்தைக் குடியிலே செலவழித்து வருவது சரண்யாவை மிகவும் வருத்தமடையச் செய்தது. இனி இவர் திருந்த மாட்டார் என எண்ணி மனமுடைந்த சரண்யா வீட்டுக்குள் தூக்குமாட்டி தொங்கினார்.

 

தற்செயலாக வீட்டுக்குள் சென்ற சிவகுமார் சரண்யாவின் நிலையைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர்கள் உதவியுடன் சரண்யாவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சிவகுமார் தனது குடியினால் தான் மனைவியை இழந்து விட்டோம் என்று வேதனைப்பட்ட அவர் மனைவி சரண்யாவின் சேலையை எடுத்து அதில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

http://onelink.to/nknapp

 

பின்னர் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்தால் மனைவியும் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவர்களது இரு குழந்தைகளின் எதிர்காலம் கருதி அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குடி குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். அதோடு நல்ல குடும்பத்தையும் கெடுக்கும் இதை அரசாங்கம் எப்போதுதான் உணர போகிறதோ? மதுவுக்கு எப்போதுதான் தடை போடுமோ? எனக் குடும்பப் பெண்கள் ஆதங்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.