Skip to main content

அடித்தது போலீஸ்; பதிலுக்கு அடித்தது பப்ளிக்! -சிறைக்குள் தள்ளியது வழக்கு!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

தன்னை அடித்த போலீஸை திருப்பி அடித்து கைதட்டல் வாங்குவதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் அப்படி நடந்துகொண்டால் கம்பி எண்ண வேண்டியதுதான். சாத்தூரைச் சேர்ந்த பத்மநாபனும் கண்ணனும் அப்படி ஒரு வழக்கில்தான் கைதாகியிருக்கின்றனர். சரி, விவகாரத்துக்கு வருவோம்!

அன்றைக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக போக்குவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் சாத்தூர் போலீசார். பத்மநாபனின் கடைக்கு முன்னால் அவருக்குச் சொந்தமான ஆட்டோ நின்றது. நோ பார்க்கிங் இடத்தில்  ஆட்டோ நிற்பதாகச் சொன்னது போலீஸ். ‘என்னுடைய இடத்தில்தானே ஆட்டோ நிற்கிறது. அதெல்லாம் எடுக்க முடியாது.’ என்று மறுத்துப் பேசினார் பத்மநாபன்.  

 

Beaten police; re-beaten public... incident in sathur

 

Beaten police; re-beaten public... incident in sathur

 

‘பப்ளிக்’ எதிர்த்துப் பேசினால் விரைப்பான போலீசார் சும்மாவா இருப்பார்கள்? கடைக்குள் புகுந்து பத்மநாபனைப் பின்னி எடுத்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து,  ‘வழக்கு போடுறதுன்னா போட்டுக்க வேண்டியதுதானே? மரத்தடியில்தானே ஆட்டோ நிற்குது. என்னை எதுக்கு அடிக்கணும்? ஆர்.சி.புக்கெல்லாம் தர முடியாது. கையை வெட்டிருவேன். எவனா இருந்தாலும் சரி. மொதல்ல என்னை அடிச்சதுக்குப் பதில் சொல்லுங்க.’ என்று வீராவேசமாக நியாயம் கேட்டிருக்கிறார் பத்மநாபன். அப்போது, டிரைவரான உறவினர் கண்ணனும் பத்மநாபனுக்கு உதவும் விதத்தில் அங்கு நின்றிருக்கிறார். பொது இடத்தில் போலீசுக்கும் பத்மநாபனுக்கும் காரசாரமாக நடந்த இந்த வாய்ச்சண்டையை பலரும் வேடிக்கை பார்த்தனர். சிலர் செல்போன் கேமராவில் வீடியோவும் எடுத்தனர். ஒருகட்டத்தில் தாக்குதலும் நடந்தது. 

 

Beaten police; re-beaten public... incident in sathur

 

போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் நம்மிடம்  “வாக்குவாதம் செய்தபோது போதையில் இருந்தார் பத்மநாபன். என் முகத்தில் குத்தினார்.  தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். அதற்கு முன் பத்மநாபனின் கடைக்குள் நான் போகவில்லை.  அவரை அடிக்கவுமில்லை. சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன்.“ என்றார்.  சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தாக்கப்பட்டதாக சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் புகார் ஆகிவிட, பத்மநாபனும் கண்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். 

யாரை வேண்டுமானாலும் காவல்துறையினர் அடிப்பார்கள். ஆனால்,  ஆத்திரத்தில் யாராவது காவல்துறையினர் மீது கைவைத்தால் விடவே மாட்டார்கள். இது,  எந்தச் சட்டத்திலும் இல்லாத பொதுவான விதியாகிவிட்டது. நியாயமா நியாயமாரே?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.