தமிழ்மொழி வளர்ச்சி பண்பாட்டு அடையாளங்களை தொடர்ச்சியாக பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு தொல்லியல்துறை செய்து வருவதும் உலகக் கவனம் பெறுவதாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் துறை ஆய்வாளர் ஆ.மணிகண்டன் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; “முன்னப்போதும் இல்லாத அளவிற்கு கீழடி, சிவகளை, பொற்பனைக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் நடந்து வருகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் இரும்பு காலத்தின் உச்சபட்ச கணக்கீடு மயிலாடும்பாறையில் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும், உலக அளவில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கும் அமெரிக்காவின் பீட்டா நிறுவனம் மூலமாக அறிவியல்பூர்வ காலக்கணிப்பை வெளிப்படுத்தி 4200 ஆண்டுகள் பழமையானது இரும்புக்காலம் என்பதை கரிம பரிசோதனையின் மூலம் தமிழ்நாடு தொல்லியல்துறை நிறுவியிருப்பது, இந்திய வரலாற்றை மறு நிர்மாணம் செய்வதற்கு அடிகோலும், தமிழகத்தில் கிடைத்திருக்கும் பல்வேறு பானை குறியீடுகளையும் சிந்து சமவெளி எழுத்துக்களையும் ஒப்புநோக்கி அதற்கான ஆய்வினை தமிழ்நாடு அரசு செய்யவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் விதி எண் 110ன் கீழ் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இது சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் இருந்த மொழி அறிவுசார் தொடர்பை வெளிப்படுத்துவதாக அமையும், உலகம் முழுவதும் பரவியிருந்த தமிழர்களின் வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் அகழ்வாய்வு செய்யவிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருப்பதன் மூலமாக தமிழர்களின் வணிகத் தொடர்பு புதிய தரவுகளைக்கொண்டு அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு தொல்லியல் துறை மிக முக்கிய இடத்தைப் பிடித்து இருப்பதற்கு காரணமாக இருக்கும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் அனைத்து நிலை ஆய்வாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு தமிழர் பண்பாட்டை காப்பதிலும் தமிழ்மொழி வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான முன்னெடுப்பை செய்வதற்கு இத்தகைய ஆய்வுகள் அடித்தளம் அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.