வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும்.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் மழையும், சேலம் ஏத்தாப்பூரில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.