சென்னை மாநகரில் அனுமதியின்றி விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, டிராபிக் ராமசாமி அனுப்பிய மனுவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் மட்டுமே பேனர்கள் வைக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் நடைபாதைகளின் குறுக்கே பேனர்கள் வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.