Skip to main content

“செலவுக்கு காசு இல்ல... துணிவு படம் ஐடியா கொடுத்துச்சு...” - வங்கிக் கொள்ளையில் சிக்கிய இளைஞர்! 

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

Bank theft issue in Dindigul police arrested one youngster

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று காலை நடந்த பயங்கர கொள்ளைச் சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை பதற்றமடைய வைத்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று காலை வங்கிப் பணியாளர்கள் 10 மணி அளவில் வங்கிக்கு வந்து தங்கள் பணிகளைத் துவங்கியுள்ளனர். இரண்டு பெண் பணியாளர்கள், வங்கி மேலாளர் உட்பட நான்கு பேர் வங்கிக்குள் இருந்த நிலையில், வாடிக்கையாளர்போல் வங்கிக்குள் நுழைந்த ஒரு இளைஞர், வங்கி பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை கேட்டுள்ளார்.

 

அதற்கு அங்கிருந்த ஒரு பணியாளர் வாடிக்கையாளர் போல் வந்த அந்த இளைஞரின் சந்தேகங்களை விவரித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரம் அந்த இளைஞர் தன் கையில் வைத்திருந்த ஒரு வகையான ஸ்ப்ரேவை அங்கிருந்த பணியாளர் முகத்தின் மீது அடித்துள்ளார். அதில் அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கத்தியுள்ளார். இதனைக் கண்டு அருகிலிருந்த இரண்டு பணியாளர்களும் நெருங்கி வர அவர்கள் மீதும், அந்த இளைஞர் ஸ்ப்ரே அடித்துள்ளார்.

 

அவர்கள் மூவரும் அந்த ஸ்ப்ரேவில் நிலைகுலைந்து இருக்க, ஏற்கனவே தயாராக வந்திருந்த அந்த இளைஞர் தான் வைத்திருந்த டேப் மூலம் வங்கி ஊழியர்களின் கைகளைக் கட்டினார். இதில், வங்கியின் உள்ளே இருந்த ஒரு பணியாளர் வெளியே நடந்த சம்பவத்தினை அறிந்து சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞரிடம் மாட்டாமல் வங்கிக்கு வெளியே வந்து ‘கொள்ளையன்... கொள்ளையன்... பேங்க்ல கொள்ளையடிக்கிறான்...’ எனக் கத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக வங்கிக்குள் சென்று அந்தக் கொள்ளையனை மடக்கிப் பிடித்து அவரின் கைகளைக் கட்டியுள்ளனர்.

 

பிறகு வங்கி ஊழியர்கள், திண்டுக்கல் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த கலில் ரகுமான் (23) என்பதும் இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை ஏதும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

 

மேற்கொண்டு நடத்திய தொடர் விசாரணையில் அந்த இளைஞர், ‘கல்லூரி முடித்துவிட்டு, வேலைக்கு போகாமல் இருக்கிறேன். செலவுக்கு வீட்டில் தான் பணம் வாங்கி வருகிறேன். தற்போது வீட்டிலும் பணம் கொடுப்பதில்லை. அந்த விரக்தியில் இருந்தபோது, தற்போது வெளியாகியுள்ள துணிவு படத்தை பார்த்தேன். அதில், வங்கியில் கொள்ளையடிக்கும் நிகழ்வு நடக்கும். மேலும் சில படங்களை பார்த்தேன். அதன்பிறகு வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்து ஸ்ப்ரே, ஊழியர்களை கட்டிப் போட டேப், அவர்களைத் தாக்க கம்பி உள்ளிட்டவற்றை எடுத்து வந்தேன்’ என்று தெரிவித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கலில் ரகுமானிடமிருந்து காவல்துறையினர், அவர் உபயோகப்படுத்திய ஸ்ப்ரே, கையில் வைத்திருந்த கம்பி, டேப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.