Skip to main content

பங்காரு அடிகளார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Bangaru passedaway; Political celebrities mourn

 

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த  த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், “பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீகத்துக்கு பெரும் இழப்பு” எனத் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

 

அதேபோல், அமமுக கட்சியின் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்தவர் பங்காரு அடிகளார். அவரை இழந்து வாடும் உறவினர்கள், பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யலாம் என்ற முறையை உருவாக்கி புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். சித்தர் பீடம் மூலம் மருத்துவம், கல்வி நிறுவனங்களைத் தொடங்கி சேவையாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெண்கள் உட்பட அனைவரும் கருவறை சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் கோயிலில் கொண்டு வந்து ஆன்மீகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமை பங்காரு அடிகளாருக்கு உண்டு. பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.