ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பது குறித்து பொதுமக்களின் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.
ரம்மி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்துவரும் நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பது குறித்து பொதுமக்களின் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களிடமும் வரும் 11ஆம் தேதி நேரடியாக கருத்துகளைக் கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.