தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப். 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் நேற்று (2ஆம் தேதி) பதவியேற்றுக்கொண்டனர். மேலும், நாளை (4ஆம் தேதி) மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக வாக்குப்பெட்டிகள் மற்றும் அட்டை பெட்டி தயார் செய்யப்பட்டுவருகிறது.