
கோவை ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரான ஜான் ஜெபராஜ் பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார். குறிப்பாக கிறிஸ்தவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமாகி இருந்தார். ஜெபராஜ், எட்வின் ரூஸோ என்பருடன் இணைந்து கோவை கிராஸ்கட் சாலையில் 'கிங் ஜெனரேஷன்' என்ற பிரார்த்தனை கூடத்தை நடத்தி வந்தார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இதனால் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் சிறுமிகளை முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. தொடர்ந்து ஜான் ஜெபராஜ் மீது இரண்டு போக்சோ வழக்கு பாய்ந்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின் பொழுது அதில் கலந்துகொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தேடிவந்தனர்.
தொடர்ந்து கடந்த 13/04/2025 அன்று மூணாறில் வைத்து கைது செய்து நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரியின் முன் தினமும் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து ஜான் ஜெபராஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.