Skip to main content

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் பின்னணி! 

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

Background of Tambaram Police Commissioner Amalraj!

 

தாம்பரம் காவல் ஆணையகத்தின் இரண்டாவது காவல் ஆணையராக கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம். 

 

தாம்பரத்தின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரவி ஓய்வுபெற்றதையடுத்து, போலீஸ் அகாடமியின் இயக்குநராக உள்ள அமல்ராஜை தற்போது தமிழக அரசு நியமித்துள்ளது. கடந்த 1996- ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ச்-ஐ சேர்ந்த அமல்ராஜ், திருப்பூர் ஏ.எஸ்.பி.யாக தனது காவல் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு, மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், மதுரை புறநகர், தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை எஸ்.பி.யாக கடந்த 2000- ஆம் ஆண்டு முதல் 2010- ஆம் ஆண்டு வரை அவரது பயணம் தொடர்ந்தது.

 

அதைத் தொடர்ந்து, பதவி உயர்வு பெற்று திருச்சி, ராமநாதபுரம், சேலம் சரகங்களின் டி.ஐ.ஜி.யாகவும், பின்னர், சேலம், திருச்சி, கோவை காவல் ஆணையராகவும், திருச்சி, கோவை மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டார். 

 

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சேர்ந்த இவர், நாகர்கோவில் கார்மல் பள்ளியில் மேல்நிலைப்படிப்பை முடித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த பிறகு மனிதவள மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ. பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். 

 

சிறப்பான காவல் பணிக்காக அமல்ராஜ், குடியரசுத்தலைவர் பதக்கம், சிறந்த பொதுச்சேவை மற்றும் சிறந்த காவல் பணியாற்றியதற்காக முதலமைச்சரின் பதக்கங்களைப் பெற்றுள்ளார். காவல் பணி மட்டுமின்றி எழுத்திலும் அமல்ராஜ் சிறந்த புலமை பெற்றவர். ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனர் பொறுப்பையும் கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.