ADVERTISEMENT

வெளியானது சிகிச்சைக்கு பிறகான சிறுமி தான்யாவின் புகைப்படம்!

07:17 PM Sep 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆவடி சிறுமி தன்யாவின் சிகிச்சைக்கு பின்னரான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களது 9 வயது மகள் தான்யா, வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தான்யாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி எனப் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில், நாளடைவில் அந்தப் புள்ளி பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு உருவானது. உடனே பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்த பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியைச் சிதைத்துவிட்டது. தங்களது சக்திக்கும் மீறி பல இடங்களில் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகளை தொடங்கிய நிலையில் அதுவும் கைகொடுக்கவில்லை.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி தான்யா தெரிவிக்கையில், ''பிரெண்ட்ஸ்ங்க கூட வெறுக்குறாங்க. உனக்கு இந்த மாதிரி கன்னம் இருக்கு நீ இங்க வந்து உட்காரக்கூடாது. நீ லாஸ்ட்ல போய் உட்காரு'னு சொல்வாங்க. கடைசி பெஞ்ச் இருக்கும் அங்கதான் நான் போய் லாஸ்ட்ல உட்காருவேன். புக்கு கூட எடுத்துட்டு வந்து கைல தரமாட்டாங்க டேபிள் மேலதான் வைப்பாங்க. முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரிபண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு'' என்றார் ஏதுமறியா மழலை குரலில்.

இதனைத்தொடர்ந்து தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதேபோல் சிறுமியின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த மாதம் 22 ஆம்தேதி அறுவை சிகிச்சை முடிந்தது. மொத்தம் 10 பேர் கொண்ட மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை முடித்திருந்தது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுமி தான்யா வைக்கப்பட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது சிறுமி தான்யாவின் சிகிச்சைக்கு பிறகான புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்த சவிதா மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT