baby sleeping inside the house was found in a water tank

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகம் கரையப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் - வீராயி தம்பதியின் மகன் மோகன் (வயது 34) பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வந்தவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பூரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கர்ப்பிணியாக இருந்த பெண் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

முதல் திருமண வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர்கள் சம்மதத்துடன் வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த செண்பகவள்ளி (எ) கிருத்திகாவை முறைப்படி தாலி கட்டாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

வெள்ளிக் கிழமை மதியம் குட்டியப்பன் - வீராயி இருவரும் அவர்களின் மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றுவிட்டனர். அப்போது மோகன், செண்பகவள்ளி இவர்களின் 35 நாள் பச்சிளங்குழந்தை மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். மாலை 4 மணிக்கு செண்பகவள்ளி குழந்தையை கட்டிலில் படுக்கப் போட்டுவிட்டு வீட்டிற்குள் உள்ள குளியல் அறைக்குச் சென்று குளிக்கச் சென்றுவிட்டார். மோகன் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார்.

Advertisment

 baby sleeping inside the house was found in a water tank

செண்பகவள்ளி குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. பதறிக் கொண்டு மோகனை எழுப்பி குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார். இருவரும் குழந்தையை தேடும் போது குழந்தைக்கு உடுத்தி இருந்த துணிகள் வீடு ஓரம் கிடந்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து தேடினார்கள். சிறிது நேரத்தில் மொட்டைமாடியில் மூடியிருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்த மோகன் குழந்தை இதுக்குள்ள கிடக்கு என்று தூக்கியுள்ளார். பேச்சுமூச்சின்றி கிடந்த குழந்தையை அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் காட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

35 நாள் பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில் ஊரே கூடிவிட்டது. கே.புதுப்பட்டி போலீசாரும் வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணைசெய்து வருகின்றனர்.

Advertisment

பிறந்து 35 நாட்களேயான பச்சிளங் குழந்தை எப்படி மாடிக்கு போனது? யார் தூக்கிச் சென்றது? வீட்டிற்குள் இருவர் இருக்கும் போது யார் உள்ளே நுழைந்து குழந்தையை தூக்கி இருப்பார்கள்? நாய் தூக்கிச் சென்றிருந்தால் கடித்து வெளியில் தான் வீசி இருக்கும்.. மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டுவிட்டு தொட்டியை மூடிய கொடூர கொலைகாரன் யார்? சிறிது நேரத்திலேயே தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் எண்ணம் எப்படி உருவானது என்பது போன்ற பல கேள்விகளுடன் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். யார் குற்றவாளி என்பதை விரைவில் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் எனபோலீசார் கூறினர்.