ADVERTISEMENT

தூங்கிய செவிலியர்; பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்

10:27 AM Jul 01, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம் பாளையம்புதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிசோதனைகள் பச்சிளம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 28 ஆம் தேதி ஊத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஆனந்தி பிரசவத்திற்காகப் பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அவருக்குப் பெண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டுச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் சுகாதார நிலையத்திலேயே இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(29ம் தேதி) குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் சுமார் இரவு 11.30 மணி அளவில் குழந்தைக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது மருத்துவமனையில் ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அவர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் செவிலியர்களின் அறை உள்ளிட்டவற்றை உள்பக்கமாக பூட்டிவிட்டுத் தனி அறையில் சென்று தூங்கியுள்ளனர். குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டவுடன் செவிலியர்களை அழைக்க முற்பட்ட பொழுது, அறைகள் பூட்டப்பட்டிருந்ததால் எவ்வளவு தட்டியும் கதவுகள் திறக்கப்படவில்லை. செவிலியரும், உதவியாளரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. மருத்துவமனையின் வெளிக் கதவுகளும் பூட்டப்பட்டதால் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மருத்துவமனைக்குள்ளேயே சிக்கித் தவித்துள்ளனர். தொடர்ந்து செவிலியர்களை அழைக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் சுமார் அதிகாலை 3.30 மணி அளவில் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து உறவினர்கள், 30 ஆம் தேதி காலை மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தொப்பூர் காவல்துறையினர் நேரில் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு குழந்தையின் சடலத்தை வாங்கிச் சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT