Skip to main content

தூங்கிய செவிலியர்; பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Baby passes away Dharmapuri Government Primary Health Centre

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம் பாளையம்புதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிசோதனைகள் பச்சிளம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

 

கடந்த 28 ஆம் தேதி ஊத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஆனந்தி பிரசவத்திற்காகப் பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அவருக்குப் பெண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டுச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் சுகாதார நிலையத்திலேயே இருந்துள்ளனர். 

 

Baby passes away Dharmapuri Government Primary Health Centre

 

இந்நிலையில் நேற்று(29ம் தேதி) குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் சுமார் இரவு 11.30 மணி அளவில் குழந்தைக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது மருத்துவமனையில் ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அவர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் செவிலியர்களின் அறை உள்ளிட்டவற்றை உள்பக்கமாக பூட்டிவிட்டுத் தனி அறையில் சென்று தூங்கியுள்ளனர். குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டவுடன் செவிலியர்களை அழைக்க முற்பட்ட பொழுது, அறைகள் பூட்டப்பட்டிருந்ததால் எவ்வளவு தட்டியும் கதவுகள் திறக்கப்படவில்லை. செவிலியரும், உதவியாளரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. மருத்துவமனையின் வெளிக் கதவுகளும் பூட்டப்பட்டதால் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மருத்துவமனைக்குள்ளேயே சிக்கித் தவித்துள்ளனர். தொடர்ந்து செவிலியர்களை அழைக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் சுமார் அதிகாலை 3.30 மணி அளவில் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. 

 

Baby passes away Dharmapuri Government Primary Health Centre

 

அதனைத் தொடர்ந்து  உறவினர்கள், 30 ஆம் தேதி காலை மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தொப்பூர் காவல்துறையினர் நேரில் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு குழந்தையின் சடலத்தை வாங்கிச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.