
திருச்சி மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகக் கட்டடத்தின் பின்புற பகுதியில் உள்ள புதருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கு பணியிலிருந்த தூய்மைப் பணியாளர்கள் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அங்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு, பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் குழந்தையை மீட்டெடுத்த பணியாளர்கள், அவசரப் பிரிவில் ஒப்படைத்தனர். குழந்தைக்கு முதலுதவி அளிக்கபட்டது. குழந்தை ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மேலும், இது குறித்து மணப்பாறை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த மணப்பாறை போலீஸார் குழந்தையை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.