Skip to main content

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆடு சந்தை விற்பனை கலைக்கட்டியது!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

ayyalur goat market diwali

 

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கரோனா  காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சந்தை செயல்பட அனுமதி கிடைக்கவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு வாரங்களாக சந்தை இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்தனர். 

 

இதேபோல் தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை வாங்க வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இதேபோல் கோழி, சேவல் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு முதலே வெளியூர் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விவசாயிகளும் வியாபாரிகளும் அதிகாலை முதலே சந்தைக்கு வரத் தொடங்கினர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

 

மேலும் பல விவசாயிகள் கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வந்ததால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் வார நாட்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி செய்து தருவதோடு மட்டுமல்லாமல் சந்தை வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அதேபோல குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.