தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திருச்சியில் அரை நிர்வாணத்துடன் உடம்பில் நாமமிட்டு அய்யாக்கண்ணு வித்தியாசமான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

AYYAKKANNU PROTEST IN TRICHY

Advertisment

Advertisment

இந்த போராட்டம் குறித்து பேசிய அய்யாக்கண்ணு, "140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று சொல்லியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இதேபோல் நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும். வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லை பெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டும்.

ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க வேண்டும். தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுக்க வேண்டும். ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்க்கு திருப்பி விட வேண்டும்.

10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 7 நாட்கள் வரை தொடரும்" என தெரிவித்தார்.