Skip to main content

எச்.ராஜா தூண்டுதலே காரணம்: அய்யாக்கண்ணு பேட்டி

Published on 10/03/2018 | Edited on 10/03/2018

 

ayyakkannu


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கும், திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த பாரதிய ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் என்பருக்கும் வாக்குவாதம் நடந்ததில், அய்யாக்கண்ணு தகாத வார்த்தை பேசியதாகவும், இதனால் அய்யாக்கண்ணுவை நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்ததாகவும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியானது.
 

நடந்தது என்ன என்று அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டோம். அப்போது அவர் கூறியதாவது,
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை 100 நாள் பணத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். திருச்செந்தூருக்கு சென்றோம். அங்கு முருகன் கோவிலுக்கு சென்று, மோடி அய்யா நல்லவர்தான், அவருக்கு நல்ல எண்ணத்தை கொடு முருகா என வேண்டிக்கொண்டு வெளியே வந்து பயணத்திற்கான துண்டு பிரசுரங்களை கடற்கரையோரம் நின்றிருந்தவர்களிடம் விநியோகித்தோம்.
 

அப்போது திடீரென ஒரு பெண் ஓடி வந்து, அய்யாக்கண்ணு ஒரு ப்ரோடு, அவன்கிட்ட நோட்டீஸ் வாங்காதீங்கன்னு தடுத்தார். நான் உடனே, எதுக்கும்மா என்னை ப்ராடுன்னு சொல்றேன்னு கேட்டேன். உடனே என் கன்னத்தில் அந்த பெண் அறைந்தார். உடனே கூட இருந்தவர்கள் கத்தினார்கள். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் ஏன் என்ன என்று கூடினர். வயதானவரை அடிக்கலாமா என அந்த பெண்ணை அனைவரும் திட்டினர். வேண்டுமென்றால் போலீசில் புகார் கொடுங்கள். எங்கள் பயணத்தை தடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டோம்.

 

ayyakkannu



சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் தகாத வார்த்தையால் திட்டியதாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப்களில் பரவுகிறதே? எச்.ராஜா உங்களை கைது செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளாரே?
 

அந்தப் பெண்ணை நான் திட்டவில்லை. வீடியோவை நன்றாக பாருங்கள். அது என்னுடைய குரல் அல்ல. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் திட்டுகின்றனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனக்கு நிறைய பேர் போன் செய்து தகாத வார்த்தையில் என்னை திட்டுகின்றனர். பிரச்சனை வேண்டாம் என்று எங்களை அந்த இடத்தில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் புகார் அளித்துள்ளனர். நாங்களும் புகார் அளிக்க உள்ளோம்.

எச்.ராஜா என்ன வார்த்தையை பயன்படுத்தினாரோ அதே வார்த்தையைத்தான் இந்தப் பெண்ணும், அய்யாக்கண்ணு ப்ராடு என பயன்படுத்தினார். எச்.ராஜா, நாராயணன் ஆகியோருக்கு விவசாயிகள் என்றாலே பிடிக்காது. அவர்களின் தூண்டுதலில்தான் இந்த பெண் எங்களை தடுத்தார். இந்த பெண் ஒரு கருவி. அவ்வளவுதான். சாதாரண விவசாயிகளான எங்களை தடுக்கிறார்களே, இதேபோல் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கட்சிகள் செய்தால் அவர்களை இவர்களால் தடுக்க முடியுமா என்றார்.

 

Nellaiyammal


இதனிடையே விவசாயிகள் தள்ளி விட்டு தாக்கியதில் காயம் அடைந்ததாக நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயிலில் நோட்டீஸ் விநியோகிக்கக்கூடாது என்று சொன்ன தன்னை அய்யாக்கண்ணு தகாத வார்த்தையில் திட்டியதாகவும், விவசாயிகள் தாக்கியதாகவும், அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.