Skip to main content

மரங்களின் காதலர் விதைத்த விழிப்புணர்வு... பிறந்தநாளில் கடல் கடந்து நட்டப்பட்ட மரக்கன்றுகள்!!  

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கற்பகசோலை 'மரம்' பெ.தங்கசாமி. சராசரி விவசாயியாக இருந்த மரம் தங்கசாமி, விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு கடனாளியாக இருந்தார். இவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, அவரது திருமணம். திருமணக் கோலத்தோடு தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு தனது இல்லறவாழ்வைத் தொடங்கினார்.

 

அதன் பிறகு, தேசியத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் என அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் என எந்த ஒரு நாளாக இருந்தாலும் அவர்கள் நினைவாக ஒரு மரக்கன்றை தன் தோட்டத்தில் நட்டார். மழை, வறட்சி அத்தனையும் தாங்கி வளரத் தொடங்கியது மரங்கள். பழ மரங்களைத் தேடி பறவைகள் வந்து, பலவகை மரக்கன்றுகளுக்கு விதைபோட்டது. நட்ட மரங்களைவிட பறவைகளால் விதைக்கப்பட்ட மரங்கள் அதிகம். இப்படித் உருவான தோட்டத்தின் மரங்கள், அவரின் கடனை அடைக்க உதவியது.

 

Awareness sown by the lover of trees ... on a birthday Planted saplings

 

மரங்களால் தனக்கு நட்டமில்லா வருமானம் கிடைப்பதை மற்றவர்களிடமும் கொண்டுசெல்ல நினைத்து, தான் கலந்து கொள்ளும் திருமணம், காதணி போன்ற விழாக்களில், மரக்கன்றுகளை நடுவதுடன், மணமக்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்து வந்தார். தொடர்ந்து பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, விழாக்களை தொடங்கி வைத்தார். இப்படித் தொடங்கிய அவரது இயற்கைப் பயணம் தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்தது. ஆண்டுக்கு ஒருமுறை சைக்கிளில் தமிழகம் முழுவதும் சுற்றி மரக்கன்றுகளை நடுவதுடன், பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டியதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருடன் தொடர்ந்து பயணித்தார். இப்படியாக தொடர்ந்த அவரது பயணத்தில், விழாக்களில் தாம்பூலப் பைக்கு பதில் மரக்கன்றுகளைக் கொடுக்க வலியுறுத்தி வந்தார். 

 

'மரப்பயிரும் பணப்பயிரே' என்ற வாசகத்துடன் தொடங்கிய அவரது புரட்சிப் பயணம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. இவரது இந்தப் பயணத்தை தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக, இவரது பெயரில் தமிழகத்தின் பல ஊர்களிலும் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 

cnc

 

இந்நிலையில், இன்று நவம்பர் 30 ஆம் தேதி, மரம் தங்கசாமி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சிங்கப்பூர், மலேசியா, குவைத், அமெரிக்கா, மாலத்தீவு போன்ற பல நாடுகளிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். கீரமங்கலம் காவல்நிலைய வளாகத்தில் மெய்யநாதன் எம்.எல்.ஏ மற்றும் கைஃபா, நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகளை நட்டனர்.

 

அதேபோல புதுக்கோட்டை, தஞ்சை  மாவட்டங்களில் கீரமங்கலம், செரியலூர், நெடுவாசல், அரசர்குளம், பேராவூரணி மற்றும் பல கிராமங்களிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். அதேபோல பெங்களூரு, சென்னை, டெல்லி, செங்கல்பட்டு என இந்தியாவில் பல இடங்களிலும் தமிழகத்தில் ஏராளமான ஊர்களிலும் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.

 

தனி ஒருவராக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை விதைத்தார். ஆனால் இன்று இளைஞர்கள் ஏராளமானோர் விதைக்கிறார்கள். எல்லாம் அவர் விதைத்த விழிப்புணர்வு தான் என்கிறார்கள் இளைஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.