/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mini33222.jpg)
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுக் குறும்படம் தயாரித்த மாணவர்களுக்கு சிறந்த குறும்படத்திற்கான பரிசுத்தொகையை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுக் குறும்படம் தயாரித்த மாணவர்களுக்கு சிறந்த குறும்படத்திற்கான காசோலைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (20/10/2021) வழங்கினார்.
சிறார் நீதிக்குழு (Hon'ble Juvenile Justice Committee) சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் குறும்படம் தயாரிப்பதற்கு D.F.T. மற்றும் Viscom பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களால் தயாரித்து வழங்கப்பட்ட குறும்படங்களை அரசின் தேர்வுக்கு குழு போட்டி முறையில் தேர்வு செய்தது.
அதில் சிறந்த குறும்படங்களான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் எம்.ஆனந்தன் தயாரித்த 'வலி' என்ற குறும்படத்திற்கு ரூபாய் 1 லட்சம் மற்றும் திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர் வி.பிரசாந்த் தயாரித்த 'பாரதி' என்ற குறும்படத்திற்கு ரூபாய் 50,000- க்கான பரிசுத் தொகைகளைக் காசோலைகளாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்." இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)