Skip to main content

தேர்தலுக்காக செய்ததுபோல் இல்லாமல் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும்: ஈஸ்வரன்

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியிருப்பது தேர்தலுக்காக செய்ததுபோல் இல்லாமல் திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நேற்றையஎ தினம் அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியிருப்பது வரவேற்புக்குரியது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. 
 

அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மக்கள் பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்ததை நாம் அறிவோம். இப்படி போராட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் ஆளுங்கட்சி சார்பில் திட்டத்தை நிறைவேற்றி தருகிறோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு பலமுறை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள். 
 

அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு 2011 -ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களால் சட்டசபையில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கான போராட்டம் மக்கள் மத்தியில் மிகவும் தீவிரமடைந்தது. 


2016–ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னர் இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதன் விளைவாக சட்டசபையில் ஜெயலலிதா அவர்கள் அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு ஆரம்பக்கட்ட கள ஆய்வுக்கு 3 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு மீண்டும் திட்டம் நிறைவேற்றப்படுவது போல நம்பிக்கையை ஏற்படுத்தினார். 

 

eswaran


 

2016 -ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை கொங்குமண்டல மக்களிடத்தில் கொடுத்தார். 2016 –ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் கொங்குமண்டலம் கொடுத்த வெற்றியால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. 
 

ஆனால் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கான தமிழக அரசின் விரிவான அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றும், நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்ததற்கான காரணங்களாக கூறப்பட்டது. 
 

மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் தமிழக அரசால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் அறிவித்து பல வருடங்கள் கடந்தும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கான தமிழக அரசின் விரிவான அறிக்கைகளும் பலமுறை மாறி இருக்கின்றன. 
 

சட்டசபையில் ஒவ்வொருமுறையும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்காக அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதாக இல்லாமல் இத்திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று கொங்குமண்டல மக்களின் சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.