Skip to main content

அரசியல் தலைவர்கள் பங்கேற்ற மதுரை அவனியபுரம் ஜல்லிக்கட்டு

Published on 14/01/2021 | Edited on 14/01/2021
avaniyapuram jallikattu

 

மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதனைக் கண்டு ரசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனி விமானத்தில் மதுரைக்கு வருகைபுரிந்தார். திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினும் உடன் பங்கேற்றார்.

 

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, தைத்திருநாளை முன்னிட்டு, அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள சிவகுருநாதசுவாமி கோவிலின் முன்பாக இன்று காலை 8 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்கின்றனர். வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தகுதி பெற்றவர்களே தற்போது விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் வீரர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 

வீரர்களும், காளைகளும் சிறப்புடன் விளையாட ஏதுவாக சற்றேறக்குறைய 150 மீட்டர் நீளத்திற்கு ஒன்றரை அடி உயரத்தில் தென்னை நார்க் கழிவுகள் கொட்டப்பட்டுப் பரப்பப்பட்டுள்ளன. மேலும் பார்வையாளர்கள் மற்றும் விஜபி-க்கள் கண்டு களிக்கும் வண்ணம் வாடிவாசலின் முன்புறமாக இரண்டு பக்கமும் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் பாதுகாப்புக் கருதி சவுக்குக் கம்புகள் மற்றும் இரும்பு வலைகளைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று வாடிவாசலின் பின்புறம், காளைகள் வரிசையாக வருவதற்கு ஏற்றவாறு ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கட்டைகளால் தடுக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

வாடிவாசலிலிருந்து வெளியேறும் காளைகளை, வீரர்கள் திமிலை இறுக்கப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். வீரர்கள் யாரையும் தன்னருகே வரவிடாமல், மேற்கண்ட எதனையும் செய்ய அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

 

நாற்காலி, வேஷ்டி, துண்டு, குடம், அண்டா, தங்க நாணயம் உள்ளிட்டவை அந்தந்த சுற்றுகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளருக்கு வழங்கப்படும். 8 சுற்றுகளாய் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர் அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவார். இறுதியாக அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் சார்பாக பரிசு வழங்கப்படுகிறது.

 

வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் உடனடி மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 16 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என அங்கம் வகிக்கின்றனர்.

 

இது தவிர, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி சார்பாக இரண்டு சிறப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் கூடுதலாக அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறை வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

மேலும் காயமடையும் வீரர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக பத்து 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். காயம்படும் காளைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்க கால்நடை மருத்துவர் குழுவும், இரண்டு கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்படப் பேரிடர் மீட்புக்குழுவினர் 50 பேர் வாடிவாசல் அருகே இருப்பர்.

 

விஜபிக்கள் வருகையின் காரணமாய் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் அவனியாபுரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் கலெக்ஷன் பாய்ண்ட் என்று சொல்லப்படுகின்ற மாடுகள் வெளியேறும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அசம்பாவிதம் நேராத வண்ணம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. அவனியாபுரத்தின் பல்வேறு பகுதியில் பெரிய திரைகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண்பதற்காக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிற்பகல் 12 மணியளவில் வருகைபுரிந்தனர். இதற்காக ராகுல்காந்தி தனி விமானத்தில் டெல்லியிலிருந்து புறப்பட்டு நேரடியாக மதுரைக்கு 12 மணியளவில் வந்தடைந்தார். 

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை 2 மணி நேரம் கண்டு கழித்துவிட்டு. பிறகு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் .

 

அவனியாபுரம் பொதுமக்களும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழா எட்டு சுற்றுகளாக நடைபெற்று மாலை நிறைவடையும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.