Skip to main content

தானாய் உருவான புதிய பறவைகள் சரணாலயம்!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

Automatic New Bird Sanctuary! near perambalur

 

 

பெரம்பலூர் அருகே மருதையாற்று நீர்த்தேக்க பகுதியில் குளத்தின் நடுவே அமைந்த குட்டித் தீவில் பறவைகள் கூட்டம் தஞ்சம் புகுந்து வருகிறது. 

 

நீர்த்தேக்கத்தின் நடுவே மண் திட்டு அமைத்தால் வருங்காலத்தில் நீர்த்தேக்கம் பறவைகள் சரணாலயமாகி சுற்றுலா தலமாகும் என்ற நம்பிக்கையிலுள்ள கிராம மக்கள் மண் திட்டு அமைத்து மரங்களை உருவாக்கிட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் மருதை ஆற்றையொட்டியுள்ள தாமரை குளத்தின் நடுவில் உள்ள பாறை திட்டில் கருவை மரங்களும் ஈச்ச மரமும் வளர்ந்து அடர்ந்த புதர் போல் காட்சி தருகிறது. இந்த புதர்மேட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் கொக்கு, நாரை, நீர் காக்கை, தூக்கணாங்குருவி, வாத்துகள் என பறவையினங்கள் ஒவ்வொன்றாய் வந்து கூடுகள் கட்டி வசிக்க தொடங்கிய நிலையில் தற்போது புது விருந்தாளியாக அழகழகான வெளிநாட்டு பறவைகளும் வரத்தொடங்கியுள்ளது. 

 

அந்த சிறிய குளம் ஆயிரகணக்கான பறவைகளுடன் ஒரு குட்டி சரணாலயமயாய் உருவெடுத்துள்ளது. தினம்தோறும் மாலை நேரங்களில் உள்ளூர் பறவைகளுடன் வெளிநாட்டு பறவைகளும் சேர்ந்து கூச்சலிடும்போது எழும் ஒலியானது ஆதனூர் கிராமம் மட்டுமின்றி சுற்றுபுற கிராம மக்களையும் கவர்ந்திழுக்க வைத்திருக்கிறது. 

 

Automatic New Bird Sanctuary! near perambalur

 

 

தற்போது குளத்தை வட்டமிடும் பறவை கூட்டம், தாமரை தடாகத்தில் ஓடி விளையாடும் அழகழகு பறவைகள் எனகாட்சி தருவதால் தற்போது அப்பகுதி மக்களுக்கு அந்த தாமரைகுளம் பொழுதுபோக்கும் சுற்றுலாதலமாய் மாறி வருகிறது.

 

இந்த பறவைகளை வேட்டையாட வருபவர்களிடமிருந்து அவற்றை பாதுகாப்பதாக கூறும் சிறுவர்கள் இதனால் பண்டிகை காலங்களில் குளக்கரை பகுதியில் பட்டாசு கூட வெடிப்பதில்லை என்கிறார்கள்.

 

கடந்தாண்டு குளத்தை சுற்றி புதர் மண்டியிருந்த கருவை மரங்களை அகற்றிய கிராம மக்களுக்கு விதவிதமான பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த பாறை திட்டிலுள்ள புதர்களை மட்டும் அகற்ற மனமின்றி விட்டு வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

 

மேலும் நீர்த்தேக்க கட்டுமானப்பணி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே இங்கு அடைக்கலம் தேடி வரத்தொடங்கியுள்ள புது விருந்தாளிகளான இந்த அழகிய வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக நீர்த்தேக்கத்தின் மையத்தில் செயற்கையாக மண் திட்டுகள் அமைத்து மரங்கள் உருவாக்கி கொடுத்தால் வருங்காலத்தில் மருதையாற்று நீர்த்தேக்கத்தில் நீரை தேக்கிய பிறகு அந்த மண் திட்டுகளில் லட்சக்கணக்கில் பறவைகள் தஞ்சம் புகுந்து "கொட்டரை மருதையாற்று" நீர்த்தேக்கம் ஒரு பறவைகள் சரணாலயமாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

 

இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆதனூர். மற்றும் கொட்டரை கிராமங்களுக்கு நடுவே செல்லும் மருதையாற்றை தடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு அமைக்க தொடங்கிய இந்த கொட்டரை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 175 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நீர்த்தேக்கம் வருங்காலத்தில் எழில் கொஞ்சும் ஒரு சுற்றுச்சூழல் மையமாக அமையவிருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் தற்போதே குவிந்து வருகின்றன இந்த பறவை கூட்டங்கள் என்று கூறும் அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்விட சூழலை முன்கூட்டியே தீர் மானிக்கும் சக்தி பறவையினங்களுக்கு இயற்கையாகவே உள்ளது போல என்கின்றனர் ஆச்சர்யத்துடன். 

 

பெரம்பலூர் அருகேயுள்ள அரியலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான "கரைவெட்டி பறவைகள் சரணாலயம்" மருதையாற்று நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.