
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகனுக்கு அடுத்த படியாக கணக்கம்பட்டி அருகே இருக்கும் அழுக்கு மூட்டை பழனிச்சாமி பீடமான சற்குரு சாமி கோவிலுக்கும் தினசரி ஆயிரம் கணக்கான பக்தர்கள் தமிழக மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வருகை தந்து சற்குருவைத் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை என்றால் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சற்குருவை தரிசிக்க படையெடுத்து வருவார்கள்.
இப்படி சற்குருவை தரிசிக்க வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் பஸ் மூலம் கணக்கம்பட்டி வந்து அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் டவுன் பஸ் அல்லது ஆட்டோக்களில் சென்று சற்குருவை தரிசித்து விட்டு செல்கின்றனர். அதுபோல் வசதி படைத்தவர்கள் கார்கள் மூலமாகவும் வந்து செல்கிறார்கள். ஆனால் பக்தர்கள் வசதிக்காக கணக்கம்பட்டி மற்றும் கோவில் முன்பாக 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இருக்கிறது. அதன் மூலமாகவும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். இப்படி வரக்கூடிய பக்தர்களிடம் ஆட்டோக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பகல் கொள்ளை அடித்து வருவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது சம்பந்தமாக சற்குருவை தரிசிக்க வந்த பக்தர்கள் சிலரிடம் கேட்ட போது, “கணக்கம்பட்டியில் இருந்து சற்குரு கோயிலுக்கும், சற்குரு கோவிலில் இருந்து கணக்கம்பட்டிக்கும் ஆட்டோவில் ஒரு பக்தர் வந்தாலே போவதற்கு நூறு ரூபாயும். வருவதற்கு நூறு ரூபாயும் வாங்கி விடுகிறார்கள். ஷேர் ஆட்டோ என்றால் தலைக்கு இருபது ரூபாய் வீதம் பத்துக்கு மேற்பட்டவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் அதுவும் பின்னாடி உட்காரச் சொல்லி பயங்கர ஸ்பீடுகளில் போய் வருகிறார்கள். இதனால் பக்தர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதில் என்ன கொடுமை என்றால் சற்குரு பீடத்திலிருந்து 500 மீட்டர் முன்பாக செக் போஸ்ட் போடப்பட்டு இருக்கிறது அந்த செக் போஸ்ட் வரை தான் வண்டி வாகனங்கள் ஆட்டோக்கள் வர முடியும் அதன்பின் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் எல்லாம் அங்கிருந்து தாங்கள் கார் வைத்திருந்தால் அதில் வருவார்கள் இல்லை என்றால் ஆட்டோக்கள் மூலமும் இறக்கி விடுவார்கள். இப்படி வசதி இல்லாத வயதானவர்கள் செக் போஸ்டில் இருந்து சற்குரு பீடம் வரை செல்வதற்கு ஆட்டோவில் ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் அடாவடியாக வசூல் செய்கிறார்கள். அதற்கு பக்தர்கள் கொஞ்சம் குறைத்து சொல்லுங்கள் என்றால் அப்படி எல்லாம் வாங்க முடியாது. கேட்கிற பணத்தை கொடு என்று வாய்க்கு வந்த படிபேசுகிறார்கள். இதனால் பக்தர்களுக்கு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே அடிக்கொருக்க வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை போய் விடுகிறது. இப்படி ஓடக் கூடிய பல ஆட்டோக்களுக்கு முறையான ஆவணங்களும் இல்லை. யூனி பார்மும் சரிவர போடுவதில்லை. இதையெல்லாம் பழனி வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு இப்படி பக்தர்களிடம் அடாவடி வசூல் செய்ய கூடிய ஆட்டோ டிரைவர்கள் மீது ஆயக்குடி போலீசார் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம் புகார் கொடுக்கவும் இருக்கிறோம். பழனி, திருச்செந்தூர் போன்ற ஆன்மீக ஸ்தலத்தில் வயதானவர்கள் போய் செல்வதற்கு பேட்டரி கார் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அது போல் சற்குரு கோயில் நிர்வாகம் அல்லது பக்தர்களின் நன்கொடை மூலமாகவும் பேட்டரி கார் வாங்கி விட்டால் வயதான பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினர்.
இது சம்பந்தமாக கோயில் நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போ து, பக்தர்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று ஏற்கனவே நாங்கள் ஆயக்குடி போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம். அதோடு எங்களிடம் பக்தர்கள் புகார் கூறிய உடனே அவர்களை கூப்பிட்டுக் கண்டித்தும் இருக்கிறோம். அப்படி இருந்தும் திருந்திய பாடு இல்லை. இதற்கு ஆய்க்குடி போலீஸ் அல்லது எஸ்.பி.தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இது பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் கேட்ட போது, “இனி வருங்காலங்களில் பக்தர்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யாத அளவுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதே டி.எஸ். பி. மற்றும் இன்ஸ்பெக்டரிடம் இது சம்பந்தமாக பேசுகிறேன்” என்றார் உறுதியாக.