Skip to main content

ஆட்டோ ஓட்டுநரும் போலீஸும் மாறி மாறி தாக்குதல்; கோவையில் பரபரப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
auto driver and the police took turns beating

கோவை மாவட்டத்தில் உள்ள பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்துக் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, வாகனம் ஓட்டுபவர்களிடம் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருக்கிறதா எனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அந்தப் பகுதியில் வந்த ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் செய்யப்பட்டது. 

அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவை சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த ஆட்டோவையும் நிறுத்தியுள்ளனர். வழக்கம் போல டிராபிக் போலீசாரை கண்டதும் தனது டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோவின் ஆர்சி புக் என அனைத்தையும் எடுத்துக் காண்பித்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர். ஆனால், அவரின் பேச்சு மது அருந்தியது போல இருந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் கீழே இறங்காமல் ஆட்டோ டிரைவர், அதான் எல்லாம் சரியா இருக்குல்ல அப்றம் ஏன் கீழ இறங்குன்றீங்க எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிராபிக் போலீஸ், முதலில் நீ கீழ இறங்கு... என அழுத்தமாகக் கூறியுள்ளனர். அப்போது கீழே இறங்கிய ஆட்டோ ஓட்டுநர், சார் நான் ஒரு முக்கியமான வேலையா போறேன் சார்... என்ன விடுங்க எனக் கூறியிருக்கிறார். இதனால் மேலும் கடுப்பான போலீசார், முக்கியமான வேலைக்கு போற நீ எதுக்காக குடித்துவிட்டு வண்டி ஓட்ற? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநரோ, ஏங்க நான் சரக்கெல்லாம் அடிக்கவில்லை எனப் பதில் கூறியிருக்கிறார். ஆனால் அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து போலீசார், அவரை ஒருமையில் திட்டியுள்ளார். 

உடனே சட்டென்று கோபப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், தன்னிடம் சோதனையில் ஈடுபட்ட டிராபிக் போலீசை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமாகியுள்ளது. அப்போது ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக்கொண்டதால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இதனைக் கண்டதும் மேலும் சில டிராபிக் போலீசாரும் அங்கு வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநரை நீ குடிச்சிருக்கிறது எல்லாருக்குமே தெரியுது. அதனால் அமைதியா இரு எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் அமைதியாகாத ஆட்டோக்காரர், தன்னை அந்தக் காவலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், அது ரொம்ப தவறான வார்த்தை எனவும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு மற்ற போக்குவரத்து காவலர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, சம்பந்தபட்ட டிராபிக் போலீஸ் ஓடி வந்து அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது காலால் உதைத்துள்ளார். இவ்வாறு உதைக்கும்போது, காவலரின் காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தன்னை உதைத்த போக்குவரத்து காவலர் மீது ஆட்டோ ஓட்டுநரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளார். உடனே அருகில் இருந்த டிராபிக் போலீசார், அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து, போலீஸ் மேலேயே கை வைப்பியா? என சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அந்த ஆட்டோ ஓட்டுநரை ஒரு வழியாக காவல் நிலையம் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆட்டோ ஓட்டுநரும் டிராபிக் போலீசும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் போலீசாரின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், அங்கு நின்ற சில இளைஞர்கள் டிராபிக் போலீசை மீட்டு அவரின் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இது அனைத்தையும் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.