
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுபமுகூர்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான வரும் திங்கட்கிழமை (10.03.2025) அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும். இதனால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான மார்ச் 10 ஆம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்குக் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும்வரை செயல்படும். அதன்படி மார்ச் மாதத்தின் 8 (நாளை), 15, 22 மற்றும் 29 ஆகிய 4 சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.