Skip to main content

பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆடிட்டர்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Auditor misbehaving with trainee students

 

ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில் அலுவலகம் வைத்து ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து உடன் படிக்கும் மாணவரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து அந்த மாணவர் இது பற்றி பயிற்சியாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி அந்த மாணவரிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தியமூர்த்தி மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் சத்திய மூர்த்தியின் பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நேற்று மாலை சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்து, அவரை சரமாரியாக  அடித்து உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். இந்நிலையில் சத்தியமூர்த்தியின் அலுவலகம் முன்பு திரண்ட மாணவ - மாணவிகள், உறவினர்கள் சத்தியமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். கைது செய்யவில்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், சூரம்பட்டி போலீசார் ஆடிட்டர் சத்தியமூர்த்தி மீது 506(ii) மிரட்டல் விடுப்பது, 294 (பி) கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது ஆடிட்டர் சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.