Skip to main content

ஆத்தூர்: பெண் காவலரின் சட்டையைப் பிடித்து ரகளை; திமுக பிரமுகர் கைது!

Published on 19/04/2019 | Edited on 19/04/2019


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மோட்டூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி சசிகலா (35). இரண்டு மகன்கள் உள்ளனர். ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் இரண்டாம்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். 

 


இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அக்கிசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 97ம் எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, ஏப்ரல் 18ம் தேதி, காவலர் சசிகலா அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். 

 

 Attur: The woman police shirt is holding by a man:DMK person arrested


பகல் 3 மணியளவில் வாக்குப்பதிவு ஓரளவு மந்தமாக இருந்தது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு அரசமரத்தடி நி-ழலில் குடிபோதையில் இருந்த சிலர், கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு விடும் சூழல் உள்ளதாக காவல் பணியில் இருந்த சசிகலாவுக்கும், வாக்குச்சாவடி அருகே இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்திக்கும் தகவல் கிடைத்தது. 

 


அதையடுத்து சசிகலா, அந்த கும்பலை சத்தம் போட்டு விரட்டி அடித்தார். பின்னர் அவர் வாக்குச்சாவடிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபர், காவலர் சசிகலாவை பார்த்து, 'ஏய் நீ எந்த ஊருக்காரிடி?' என்று கண்ணியக்குறைவாக கேட்டு கூச்சல் போட்டார். இதனால் கோபம் அடைந்த அவர், அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்தார். அப்போது திடீரென்று அந்த வாலிபர் சசிகலாவின் காக்கி சீருடையை முன்பக்கமாகப் பிடித்து இழுத்தார். கையை எடுக்கச் சொன்ன பிறகும் வாலிபர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தார்.  

 


ஊர்க்காரர்கள் சிலர், சட்டையில் இருந்து கையை எடுக்கும்படி வாலிபரை பிடித்து இழுத்தனர். அப்படியும் அவர் சட்டையை வலுவாக பிடித்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த காவலர் சசிகலா, அந்த வாலிபரின் கையைப் பிடித்து கடித்தார். அதன்பிறகே அவர் சட்டையில் இருந்து கையை எடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

 


பலர் முன்னிலையில் தன்னை அசிங்கப்படுத்திய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார். விசாரணையில், அந்த வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28) என்பதும், தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டதும், சம்பவத்தின்போது அவர் குடிபோதையில் இருந்ததும், திமுக பிரமுகர் என்பதும் தெரிய வந்தது. 

 


அந்த வாலிபர் மீது இ.த.ச., பிரிவுகள் 294 பி (ஆபாசமாக பேசுதல்), 353 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி மாலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 


குடிபோதையில் வாலிபர் ஒருவர், பணியில் இருந்த பெண் காவலரின் காக்கி சட்டையை முன் பக்கமாக பிடித்து இழுத்தபடி மல்லுக்கட்டியிருக்கிறார். அவர் மீது மானபங்கம் செய்தல் (பிரிவு 354) போன்ற பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை என சக காவலர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.

 


காவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: 


வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தினருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க இதுபோன்ற பணிகளின்போது ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேநேரம், உள்ளூர் காவல்துறையினர் கையில் மரத்தடியோ, பைபர் லட்டிகள் கூட எடுத்துச்செல்லக் கூடாது என்று உத்தரவிடப்படுகிறது. 

 

 

இதுபோன்ற சூழல்களில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவல்துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட அவர்களிடம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது பெரும் அதிருப்தியை காவல்துறையில் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.