Attur incident -  Pokco case was registered against 2 people, including a college student

Advertisment

ஆத்தூரில், எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர் உள்பட இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 13 வயது மகள், அருகில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியும், அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுவனும் கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் 'நெருக்கமாக' இருந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், சிறுமியும், சிறுவனும் வீட்டில் 'நெருக்கமாக' இருப்பதை ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். இதையடுத்து, நடந்ததை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டியே அந்த சிறுமியை கல்லூரி மாணவரும் பலமுறை பாலியல் துன்புறுத்தல்செய்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், மாணவியின் உடல்நிலையில் மாற்றங்கள் தென்பட்டுள்ளன. அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதோடு, வாந்தியும் எடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, தன் தாயிடம் கூறியதை அடுத்து, அவர் மகளை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேல் சிகிச்சைக்காக அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.