தமிழ்நாடு முழுவதும் மார்ச் மாதத்தின் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும்வரை செயல்படும்.
மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாகத் தமிழகப் பதிவுத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இன்று (01.03.2025) முதல் மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்து பொதுமக்கள் பயன்பெறும் விதமாகப் பதிவுத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.