Attempts to break into shops near the Collector's office

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே உணவகம், டீ கடை, பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், நேற்று அதிகாலை 2-மணி அளவில் சிகப்பு நிற டி-ஷர்ட் மற்றும் டிரவுசர் அணிந்த வாலிபர் ஒருவர் உணவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உணவகத்தினுள் அங்கும் இங்குமாக பணம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து பணம் எதுவும் கிடைக்காததால் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள கடைகளில் கல்லாவில் பணம் ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்திருக்கிறார்.

அங்கும் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தியுடன் மேம்பாலத்தின் வழியாக செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவில் பதிவாகி உள்ளது. 24-மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உணவகத்தின், கடைகளின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த சிசிடிவி காட்சியினைக் கொண்டு வேலூர் சத்துவாச்சாரி காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் முயன்ற வாலிபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.