திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நேற்று (20.08.2021) மாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தோஹா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம், துறவிக் காடு பகுதியைச் சேர்ந்த ஹைதர் அலி (52) என்பவர் போலியான பெயர் மாற்றம் செய்யப்பட்ட முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல இருந்ததை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள், அவரை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஹைதர் அலியை கைதுசெய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.