சலூன் கடைக்காரர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி?-பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Attempted attack of salon shopkeeper by car?-Disturbing CCTV footage

தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தி வரும் நபர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் முதலூர் பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகே வசித்து வரும் லிங்க குமார் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனைஉள்ளதாகக் கூறப்படுகிறது. லிங்க குமார் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் இசக்கி அம்மன் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சுப்பிரமணியன் மீதுவேகமாக மோதி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த சுப்ரமணியன் உடனடியாக மீட்கப்பட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சுப்ரமணியன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இடப்பிரச்சனை காரணமாக கார் ஏற்றி கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

incident police saloon Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe