Skip to main content

ஏடிஎம் மிஷினில் கொள்ளையிட முயற்சி... வடமாநில வாலிபர் கைது!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Attempt to rob ATM machine, youth arrested

 

விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது முண்டியம்பாக்கம். இந்தப் பகுதியில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. நேற்று (21.12.2021) அதிகாலை அங்குள்ள ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த 30 வயதே மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறி அவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர் தெலுங்கு மொழி மட்டுமே பேசுவதால் தெலுங்கு பேசத் தெரிந்த ஒரு போலீசாரை வரவழைத்து அவர் மூலம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வாலிபரின் புகைப்படத்தை அவர் வசித்துவரும் ஆந்திர மாநிலம் தெலங்கானா காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். இவர் மீது அங்கு ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரணை செய்தனர். அதில் இவர், தெலங்கானா மாநிலம் கர்னூல் பகுதியில் உள்ள குண்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த காசிம் சண்டி என தெரியவந்தது. இவரை கைது செய்யும்போது அவர் கையில் ஒரு ஏடிஎம் கார்டு வைத்திருந்துள்ளார்.

 

இவர் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க வந்தவரா? அப்படி எடுக்க வந்தவர் என்றால் மிஷினை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி பல்வேறு கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை செய்து அவர் மீது ஏடிஎம் மெஷினில் கொள்ளையடிக்க வந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த இளைஞர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் முண்டியம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.